search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muder"

    • மாயமான மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 63). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். முத்துசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கொளத்தூரில் உள்ள வீட்டில் மாரியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வாலிபர் ஒருவர், மாரியம்மாளிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார்.

    அப்போது, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. சம்பவத்தன்று மாரியம்மாளின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய, அவரை ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியம்மாளை காணவில்லை. இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாளின் மகன் ராஜ்குமார் கடந்த 18-ந் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று கொளக்காநத்தம் கிராமம் அய்யனாபுரம் பஸ் நிறுத்தம் அருகே காரை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்பதும், ஓடையில் உள்ள மறைவான பகுதியில் அந்த பெண்ணின் உடல் மீது மரக்கட்டைகளை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு, கரிக்கட்டையான நிலையில் கிடந்ததும் தெரியவந்தது.

    அந்த பெண் மாரியம்மாளாக இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாரியம்மாளின் உறவினரை வரவழைத்து, அடையாளம் காண செய்தனர். இதில் கருகிய நிலையில் இறந்து கிடந்தது மாரியம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, பெரம்பலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருச்சியில் இருந்து தடயவியல் போலீசார் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து மருவத்தூர் போலீசார், மாரியம்மாளின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாரியம்மாளை கொலை செய்த நபரை கைது செய்யும்வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரியம்மாளின் உறவினரான வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×