search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical team camp"

    • ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் பலியாகினர். இதையடுத்து மர்ம காய்ச்சல் பரவும் கிராமத்தில் சுகாதார குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டனர்.
    • காய்ச்சல் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தது. இந்த காய்ச்சல் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரியா(8), பூமிகா(6) ஆகிய 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அங்கு சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மர்ம காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை முதலே அங்குள்ள குடிநீர் தொட்டிகள், உறைகிணறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    அதில் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள், லார்வாக்கள் அதிக அளவில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த தண்ணீரை வினியோகம் செய்ய தடைவிதித்து நீரை வெளியேற்ற அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அங்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் 2-வது நாளாக சுகாதாரத்துறையினர் அங்கு காய்ச்சல், சளி பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

    அதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் காசிநாதபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால் குடிநீர் சப்ளை 25 நாட்களாக நிறுத்தப்பட்டு விட்டது. குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் குழாய் உடைப்புகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துள்ளனர்.இதனால் காய்ச்சல் அதிகரித்துள்ளது.

    தற்போது 11 குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறிப்பட்டு உள்ளது. அவர்களில் 9 பேருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு தான். 2 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இறந்த 2 குழந்தைகளின் உடலில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    வழக்கமாக சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த கிராமத்தில் வாரத்திற்கு ஒருமுறை வீடு வீடாக சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஆய்வு செய்வார்கள்.

    சமீப காலமாக பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர்கள் ஆய்வு செய்ய 10 நாட்களுக்கு ஒருமுறை தான் சென்றார்கள்.

    இதனால் தற்போது 40 பேர் கொண்ட குழு கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் சுகாதார பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்றார்.

    ராசிபுரம் அருகே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சியில் கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், பெரும்பாலி உள்பட 9 கிராமங்கள் உள்ளன. கூனவேலம்பட்டிபுதூர் மற்றும் பாலப்பாளையம் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் நெசவு மற்றும் விவசாயி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்கு அவர்கள் சிகிச்சை அளித்தும் சரிவர பலன் இல்லை. மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் மத்தியில் கருத்து இருந்தது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்பேரில் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி தலைமையில் பிள்ளாநல்லூர் சமுதாய சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, பிரணவ், சித்தா டாக்டர் பாலாமணி மற்றும் நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் மோகனவேல், மாவட்ட நுண்ணுயிரியல் துறை டாக்டர் மோகனசுந்தரி, சுகாதார பணியாளர்கள் உள்பட மருத்துவ குழுவினர் கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் ஆகிய 2 கிராமங்களில் 2 நாட்கள் முகாமிட்டு பொதுமக்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நடமாடும் மருத்துவமனையும் செயல்பட்டது.

    மேலும் 30 சுகாதார பணியாளர்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கொசு மருந்து அடித்தனர். டெங்கு கொசு புழு அழிப்பு, அபேட் மருந்து அடிக்கும் பணி முழு வீச்சில் நடந்தன. டாக்டர் செல்வி தலைமையில் சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று தேவையில்லாத டப்பாக்கள், பாத்திரங்களில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் முகாமை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

    2 நாட்கள் நடந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை நடந்த முகாமில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாக தெரியவில்லை. வைரஸ் காய்ச்சல் வந்தாலே கை, கால்கள் வலி எடுக்கும். எனவே இதை வைத்து சிக்குன்குனியா காய்ச்சல் என்று தீர்மானிக்க கூடாது என டாக்டர்கள் தெரிவித்தனர். 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வைரஸ் காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    ×