search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurangani Forest Fire"

    குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இருந்த போதும் கொழுக்குமலை அருகே 6000 அடி உயரத்தில் உள்ள திப்படா மலைப்பகுதிக்கு பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலம் மூணாறு வழியாக சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக கேரள வனத்துறை சார்பில் ஜீப்புகளும் இயக்கப்பட்டு வந்தன. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி புகார் அளித்தார்.

    அதன் பேரில் குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குமரேசன், ராமதாஸ், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன அலுவலர் மகேந்திரன், போடி வனச்சரகர் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் திப்படா மலைப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு அவர்கள் அளித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் கவுதம் தெரிவிக்கையில், திப்படா மலைக்குன்று கேரள-தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் ஊராட்சியிடம் சுற்றுலா பயணிகள் தற்காலிக அனுமதி பெற்று இங்கு வருகின்றனர்.

    இது குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அவர்கள் உறுதியான நடவடிக்கையை விரைவில் அறிவிப்பார்கள்.

    வனப்பகுதியில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தீ விபத்து நடக்கும் காலமாகும். இதன் காரணமாகவே இந்த கால கட்டங்களில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி குறுக்கு வழியில் வரும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

    அதிகாரிகள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து உள்ளதால் விரைவில் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார். #KuranganiForestFire
    சென்னை:

    தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த  விபத்து தொடர்பாக விசாரிப்பதற்கு, பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    இதையடுத்து  விசாரணையைத் தொடங்கிய அவர், விபத்து எப்படி ஏற்பட்டது, மலையேற்றப் பயிற்சிக்காக எப்படி அனுமதி வழங்கப்படுகிறது, எத்தகைய விதிமுறை பின்பற்றப்படுகிறது, வனத்துறை சார்பில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா, மலையேற்றக் குழுவினர் ஏதேனும் தவறு செய்துள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்.

    பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணையை முடித்த விசாரணை அதிகாரி, அதன்பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.



    இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகம் வந்த விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குரங்கணி தீ விபத்து தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் தீ விபத்துக்கான காரணங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #KuranganiForestFire

    ×