search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumari district collector"

    குமரி மாவட்ட கலெக்டர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலர், கூட்டுறவுத்துறை செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench
    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

    "எனக்கு வயது 18. 18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் ஷோபாவுக்கு மகப்பேறு நேரத்தில் அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

    18 ஆண்டுகளாகியும் எனது தாயாரை கோமா நிலையில் இருந்து மீட்க முடியவில்லை. நானும் உடல் நலகுறைவாக உள்ள தாயாரும் வாழவழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம்.

    தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், தவறான சிகிச்சை அளித்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில், மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

    அதைத்தொடர்ந்து ஷோபா குடும்பத்திற்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை குமரி மாவட்ட கலெக்டர் வழங்க கடந்த அக்டோபர் 10-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    ஆனால் அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால், நீதிமன்றம் தானாக முன்வந்து குமரி மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எடுத்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ஆதர்ஷாவின் தாயார், ஷோபாவிற்கு பிரசவம் நடைபெற்ற குலசேகரம் கூட்டுறவு மருத்துவமனை தற்போது மூடப்பட்டுவிட்ட நிலையில், அவர்களிடம் இது தொடர்பாக இழப்பீடு கோர இயலுமா? என்பது குறித்து அறிய வக்கீல் ஆணையராக லஜபதி ராயை நியமித்தும், தமிழக சுகாதாரத்துறை செயலர், கூட்டுறவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
    குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். இதில் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மீனவ பிரதிநிதிகள் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பு, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது, அலை தடுப்பு சுவர்கள் சேதம், தூண்டில் வளைவுகள் நாசமானது குறித்து பேசினர்.

    தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் மணல் சேர்ந்து இருப்பதாகவும், இதனால் தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும் படகுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். எனவே துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒகி புயலில் காயம் அடைந்த மீனவர் களுக்கு நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மீனவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியதாவது:-

    குமரி மாவட்டம் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு கடல் அரிப்பு மற்றும் அலை சீற்றம் காரணமாக அடிக்கடி பாதிப் புகள் ஏற்படுகிறது. இதற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி போதவில்லை. எனவே இம் மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபோல ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 32,500 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு கிடைக்க வில்லை என இப்போது கூறப்பட்ட புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து உள்ள மணலை அகற்றவும் ஏற்பாடு செய்யப்படும். மீனவர்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தபால் மூலம் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பதில்கள் வழங்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    குறை தீர்க்கும் கூட்டத்தில் இன்று வழக்கத்தைவிட அதிகமான மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. கூட்ட அரங்கிற்கு வெளியேயும் ஏராளமான மீனவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அடுத்த கூட்டத்தை இதைவிட பெரிய அரங்கில் நடத்திட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    ×