என் மலர்
நீங்கள் தேடியது "Kolkata Doctor death case"
- மேற்குவங்கத்தில் பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
- தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்
புதுடெல்லி:
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சந்திரசூட், சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சார்புநிலை காரணமாக பெண் டாக்டர்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். நாட்டில் நிலைமை மாறுவதற்கு தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என குறிப்பிட்டார். மேலும், மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு அருணா சான்பாக் வழக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவத் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு அருணா சான்பாக் வழக்கு ஆகும்.
கடந்த 1967-ம் ஆண்டு 25 வயதான செவிலியர் அருணா சான்பாக், மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாய் என்பவருக்கும், அருணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
1973, நவம்பர் 27-ம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் சோகன்லால் பார்த்தா வால்மிகி என்பவர் அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்தார். இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.
சுமார் 40 ஆண்டுக்கு மேலாக அருணா சான்பாக் அதே நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் அருணா சான்பாக்கை கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்களே கவனித்து வந்தனர்.
இதற்கிடையே 2011-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் பிங்கி விரானி என்பவர், அருணா சான்பாக்கை கருணை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், 2011, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அருணா சான்பாக் மூளைச்சாவு அடையவில்லை என்பதால் அவரை கருணை கொலை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அதேசமயம், அருணாவின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது பாதுகாவலர்களோ கோரிக்கை விடுத்தால் கோர்ட் அனுமதியுடன் அருணாவிற்கான உயிர்காக்கும் கருவிகளை துண்டிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2015, மே 18-ம் தேதி நிமோனியா பாதிப்பால் அருணா சான்பாக் உயிரிழந்தார்.
இதில் அருணா சான்பாக்கை தாக்கிய சோகன்லால் பார்த்தா வால்மிகி மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் 7 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின் சோகன்லால் பார்த்தா வால்மிகி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.
- குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.
மறுபுறம் பஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






