search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kali Yuga"

    • 2024-ம் ஆண்டு சனிபகவானின் ஆதிக்கத்தில் தொங்குகிறது.
    • எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு இந்த எட்டாம் எண்ணிற்கு உண்டு.

    2024-ம் ஆண்டு 8ம் எண்ணின் அதிபதியான சனிபகவானின் ஆதிக்கத்தில் தொங்குகிறது. கால புருஷ 10,11-ம் அதிபதியான சனி பகவான் கும்பத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கும் காலத்தில் 8-ம் எண் ஆதிக்கத்தில் புதிய வருடம் தொடங்குவது முன்னேற்றத்திற்கான ஒரு அமைப்பு. எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு இந்த எட்டாம் எண்ணிற்கு உண்டு. எந்த எண்ணையும் எண்ணால் எழுதும் பொழுது எழுத்து கீழே வரும். ஆனால் எட்டாம் எண்ணை மட்டும் எண்ணால் எழுதும் பொழுது மேலே செல்லும்.

    குருவின் சஞ்சாரம்:

    ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மேஷ ராசியில் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். சனி குரு சம்பந்தம் இது தர்மகர்மாதிபதி யோகம். தொழில் முனைவோர் ஏற்றம் காண்பர். புதிய தொழிற்சாலைகள் பெருகும். மூடும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகள் முழு நேரமாக உற்பத்தியை அதிகரிக்கும். தொழிலாளர்கள் ஏற்றம் பெறுவர். புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஏப்ரல் 21, 2024-ல் ரிஷப ராசிக்கு செல்கிறார். தங்கம் விலையேறும், பங்குச்சந்தை ஏற்றம் பெறும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்.ஆன்மீக விழிப்புணர்வு அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறும்.

    சனியின் சஞ்சாரம்:

    ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்பராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி கொடுப்பவரா? கெடுப்பவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். கும்ப சனி குடம் குடமாய் கொடுக்கும் என்பது பழமொழி. எனவே கும்ப சனி கொடுக்கும் சுப பலன்களை அனுபவிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். விவசாய உற்பத்தி அதிகரிக்கும். விளைச்சளுக்கு உரிய விலை கிடைக்கும். சுரங்க தொழில், எண்ணெய் உற்பத்தி,பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இனம் புரியாத நோய் தாக்கம் இருக்கும்.அரசியல் களத்தில் நாட்டு மக்களுக்கு திருப்புமுனையான சம்பவங்கள் அமையும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    மீனராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். மீனம் நீர் ராசி, கடல் ராசி, வெளிநாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். வெளிநாட்டு மோகம் அதிகமாகும். பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்வார்கள். கடலில் விளையும் பொருட்களின் விளைச்சலும், தேவையும் பயன்பாடும் அதிகரிக்கும். கடற்படையினரின் சாதனைகளும், திறமைகளும் மிளிரும். வறட்சி குறையும்.

    மழைப்பொழிவு அதிகமாகும். ஏரி குளம் போன்றவை நிரம்பும். நீர் ராசியான மீனத்தை நோக்கி சனி பகவானும் செல்வதால் மழைப்பொழிவு அதிகமாகும். கல்வித்துறை, நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், வங்கிப்பணி, ஆலயப் பணி, மதபோதனை, மருத்துவம் ஆகிய துறையினரின் வளர்ச்சி பிரமாண்டமாகும். விமானம், கப்பல் போன்றவற்றின் மூலம் சுற்றலாத் துறைக்கு நல்ல வருமானம் கூடும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.போதை பொருட்கள் கடத்துபவர்கள் அதிகரிப்பர். அவர்கள் மீது வழக்குகளும் அதிகரிக்கும். அந்நிய சக்திகள் போராட்டத்தை தூண்டுவர்.

    பொது மக்களை குறிக்கும் சனிக்கும் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் குருவிற்கும் மத்தியில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் மக்கள் பொருள் சார்ந்த விசயத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த வருடம் கடகம்,மகரம், கும்பம், மீனம் ராசி யினருக்கு அஷ்டம, ஏழரைச் சனி நடப்பதால் கவனம் தேவை. மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ராசியினருக்கு சாதக மான பலன் உண்டு. ரிஷபம், மிதுனம், விருச்சிகம், துலாம், ராசியினருக்கு சுமாரான பலன் உண்டாகும்

    அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதே நேரத்தில் திருக்கணித பஞ்சாங்க முறையே சரி என்பதற்கு சமீபத்தில் பெய்த மழை வெள்ளமே சரியான சாட்சி.

    தற்போது கோட்சாரத்தில் சனி பகவான் கும்ப ராசியில் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயின் 4-ம் பார்வை கும்ப சனியின் மேல் பதிந்தது. கும்ப சனியின் 10-ம் பார்வை விருச்சிகத்தில் உள்ள செவ்வாயின் மேல் பதிந்து டிசம்பர் 2,3,4,5ல் சென்னையின் பெரும் பகுதி மழை வெள்ளம் சூழ்ந்தது. தமிழ் நாட்டு வெள்ளத்தால் பல விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. சனி செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் பேரிடர் ஏற்படாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. மகரத்தில் சனி இருந்தால் செவ்வாயின் பார்வை சனியின் மேல் பதியாது.

    ஆகம விதியை பின்பற்றும் கோவில்கள் இன்றும் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆகம விதியை மாற்றுவது மரபு அல்ல. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்க முறையின் படி உள்ள கிரக நகர்வே சரி என்பதை உணர்ந்தவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து திருக்கணித முறையை பொது மக்களிடம் சேர்த்துக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

    நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும். ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.

    வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும். 2024 புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ பிரபஞ்ச சக்தியை மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்.

    ×