search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakshetra Issue"

    • பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் சிலர் பேராசிரியர், ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஹரிபத்மன் உள்பட 4 பேரை கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

    இந்த நிலையில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    கலாஷேத்ரா நிர்வாகம் அதனுடைய இணையதளத்தில் இதனை வெளியிட்டுள்ளது. நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன், மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கல்லூரி நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கலாஷேத்ராவில் நடந்தது என்ன? என்பது பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    • சுமார் 100 மாணவிகள் கலாஷேத்ராவில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    1936-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா கவின் கல்லூரி மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும்.

    ருக்மிணிதேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரால் தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பரத நாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு பல்வேறு கலைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபையில் உள்ள தோட்டத்திலேயே முதல் முறையாக கலாஷேத்ரா தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பிரபல தத்துவஞானியாக அறியப்பட்ட ஜோர்ஜ் அருண்டேலும் அவரது மனைவி ருக்மிணி ஆகியோர் கலாஷேத்ராவில் மேற்கொண்ட பணிகள் பெரிதும் பாராட்டை பெற்றன. கைதேர்ந்த திறமையான கலைஞர்களை கொண்டு கலாஷேத்ராவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதனால் அதன் புகழ் வெளிச்சம் பரவ தொடங்கியது. ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனத்தில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    1962-ம் ஆண்டு அடையாறில் இருந்து திருவான்மியூருக்கு கலாஷேத்ரா நிறுவனம் மாற்றப்பட்டு தற்போது வரையில் அங்கேயே செயல்பட்டு வருகிறது. பின்னர் 1993-ம் ஆண்டு கலாஷேத்ரா நிறுவனத்துக்கு பாராளுமன்றம் மூலமாக பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அங்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கலாஷேத்ரா தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகாரம் செய்யப்பட்டது.

    கலாஷேத்ரா நடத்திய நிகழ்ச்சிகளில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். கலாஷேத்ரா தொடங்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் 2016-ம் ஆண்டு மிகப்பெரிய விழா எடுக்கப்பட்டுள்ளது. அப்போது நிறுவனர் ருக்மிணி தேவி நினைவாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உள்ளன.

    இப்படி பேரோடும் புகழோடும் விளங்கி கொண்டிருக்கும் கலாஷேத்ராவில்தான் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    இதையடுத்து கலாஷேத்ராவில் நடந்தது என்ன? என்பது பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது சுமார் 100 மாணவிகள் கலாஷேத்ராவில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கலாஷேத்ராவில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார்களை தெரிவித்துள்ளனர். பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க வகையில் பேசுதல், வாய் மொழியாக தேவையில்லாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்துதல், உடலின் அங்கங்களை குறிப்பிட்டு பேசி மனரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுதல், நிறத்தை குறிப்பிட்டு பேசி மனதை நோகடித்தல் போன்ற செயல்களில் அங்கு பணிபுரியும் பலர் ஈடுபட்டு வருவதாகவும் மாணவிகள் புகார் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து கலாஷேத்ரா நிர்வாகத்திடம் எத்தனை முறை முறையிட்டாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் மாணவிகள் புகார் கூறி இருக்கிறார்கள்.

    மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையின் போது மாணவிகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பாதிப்புகள் தொடர்பாக துணிச்சலுடன் புகார்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை தொடர்ந்து கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் மேலும் பல மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கேரள முன்னாள் மாணவி அளித்திருக்கும் புகாரில், தான் கலாஷேத்ராவில் படித்த போது என்னை வீட்டுக்கு அழைத்தும், கல்லூரி வளாகத்தில் வைத்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இவரை போன்று கலாஷேத்ராவில் எத்தனை மாணவிகளுக்கு செக்ஸ் கொடுமை நடந்துள்ளது என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    அதனை வெளிக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

    • தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
    • இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு, இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணி நீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×