search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "God holding hands"

    • உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது.
    • நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள்.

    அன்பானவர்களே திக்கற்ற, நம்பிக்கையற்ற, மனிதர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார், `ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?. அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது" என்று கூறுகிறார். எவ்வளவு சந்தோஷமான, ஆறுதலான வார்த்தைகள் பாருங்கள்.

    பிரியமானவர்களே! இந்த அன்பான, ஆறுதலான, நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள். உங்களைப் பார்த்து, உங்களை நினைத்து, உங்களை விசாரித்து, உங்கள் எண்ணங்களை அறிந்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.

    இன்றைக்கு நாம் அனேக இக்கட்டான சமயங்களிலே, `எனக்கு உதவி செய்ய யாருமில்லை. உறவினர்கள் யாவரும் என்னை கைவிட்டு விட்டனர். நண்பர்கள் யாருமே என்னை நினைப்பதில்லை. என்னை யாரும் கண்டு கொள்வதில்லை. எனக்கென்று இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?' என்று புலம்புவதுண்டு.

    இப்படி தனிமை சோர்வோடு, தவிப்போடு காணப்படுகிற அன்பு சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, `இயேசு உங்களை நேசிக்கிறார், இயேசு உங்களுக்கு உற்ற நண்பராய் இருக்கிறார், அவர் உங்களை தேற்றுகிறார். இயேசு ஒரு போதும் நம்மை மறப்பதேயில்லை. நம் ஒவ்வொருவரையும் அனுதினமும் அவர் நடத்துகிறார், ஒரு நொடி கூட நாம் அவரால் மறக்கப்படுவதில்லை'.

    ஏன் தெரியுமா? இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் தன் சொந்த ஜீவனையே கொடுத்திருக்கிறார். ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுப்பதிலும் பெரிய அன்பு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை.

    இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார், `நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். என் அன்பு மகனே, மகளே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை'. (ஏசா.44:21)

    `தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை' ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். குழந்தையின் அசைவுகள், பார்வை மூலமாக அதற்கு என்ன தேவை என்பதை அறிவாள். நேரத்திற்கு நேரம் என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பாள். எப்போதும் தன் குழந்தையைப் பற்றிய நினைவுகளோடு தன் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருப்பாள்.

    குழந்தை எப்போது அழுதாலும் உடனே அதை ஆறுதல்படுத்தி, தாலாட்டி, சீராட்டி தன் சுகம் பாராமல் அதன் தேவைகளை பூர்த்தி செய்வாள். அப்படிப்பட்ட அன்பு நிறைந்த தாய் கூட சில நேரங்களில் தன் பிள்ளைகளை மறந்து, தன் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, குழந்தைகளை அனாதையாய் தவிக்க விட்டுச் செல்வதையும், அல்லது சில சூழ்நிலைகளில் தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுவதையும் செய்திகள் மூலம் அறிகிறோம். அப்படிப்பட்ட ஒரு கொடிய, அன்பில்லாத காலத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    அதனால் தான் இயேசு கூறுகிறார், `அன்பு மகனே, மகளே, தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்'. ஒருநாளும், எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை மறப்பதுமில்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை. நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து அனுதினமும் நம்மை நடத்துகிறார்.

    மகா வறட்சியான காலங்களிலும் நீர்ப்பாய்ச்சல் அருகிலுள்ள மரங்கள் போல் நம்மை ஓங்கி வளரச்செய்கிறார். ஒருநாளும் அவர் கைவிடுவதே இல்லை. சில நேரங்களில் நாம் கேட்கும் காரியங்கள் தாமதமாகிறது அல்லது கிடைக்காமல் போகிறது. ஆனால் அதிலும் ஒரு நன்மை நிச்சயமாக இருக்கும். நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை, எதைத்தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பது நம் பரம தகப்பனுக்கு நிச்சயமாக தெரியும்.

    நாம் நம்பிக்கை வைக்கிற மனிதர்கள் சில நேரங்களில் நமக்கு உதவி செய்யாமல் போகலாம். சில நேரங்களில் நாம் நினைக்கலாம், `எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும், என்ன முயற்சி செய்தும் பலன் எனக்கு கிடைக்கவில்லையே. குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய் பார்க்கிறார்களே. என்னை தரக்குறைவாய் பேசுகிறார்களே, நெருங்கிப் பழகிய நண்பர்களும் என்னை விட்டு காரணமில்லாமல் விலகுகிறார்களே, என்று நீங்கள் புலம்பலாம்.

    ஆனாலும் பிரியமானவர்களே, நீங்கள் படுகிற பாடுகளை, வேதனைகளை, கவலைகளை, துன்பங்களை, அவமானங்களை, பழிச்சொற்களை தேவன் அறிந்திருக்கிறார். அவர் சரியான நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் செய்வார். இயேசுவிடம் உங்கள், பிரச்சினைகளை, கவலைகளை, தேவைகளை கூறுங்கள். தேவன் ஒருபோதும் உங்களை மறக்கவே மாட்டார்.

    `கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்'. (சங்.115:12)

    பிரியமானவர்களே, சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து, உங்கள் மேல் தன் கண்ணை வைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.

    ×