search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ettumanur Mahadev Temple"

    • தீர்த்த யாத்திரை’ என்றாலே கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும்.
    • மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது.

    நீராடுதல் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமானது அல்ல. அது ஆன்மிகத்திலும் மிக விசேஷமாக பேசப்படுகிறது. பொதுவாக `தீர்த்த யாத்திரை' என்றாலே, புனிதமான இடங்களில் உள்ள கோவில்களைச் சார்ந்த கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும். உதாரணமாக `காசிக்கு தீர்த்த யாத்திரை செல்கிறோம்' என்று கூறினால், அங்கே கங்கை நதியில் நீராடுதல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

    அதேபோல் மகா மகம் என்று சொல்லும் பொழுது, அனைவரின் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது. கும்ப ராசியில் சூரியனும், குரு பகவானும் சஞ்சாரம் செய்யும் போது, சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் தினத்தையே `மகா மகம்' என்று கொண்டாடுகிறோம். அதைத்தவிர பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

    ஸர்வக்ஷேத்ர க்ருதம் பாபம் காசீக்ஷேத்ரே வினச்யதி

    வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி

    கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி

    எந்த இடத்தில் செய்யும் பாவங்களும் காசிக்கு வந்து கங்கை நதியில் குளிப்பதால் தீர்ந்து விடும். வாரணாசியில் செய்யும் பாவம் கும்பகோணத்தில் வந்து மகா மக குளத்தில் குளித்தால் நீங்கி விடும். ஆனால் கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள், வேறு எந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாலும் நீங்காது. அந்த பாவங்கள் நீங்க வேண்டுமானால், நாம் நிச்சயமாக கும்ப கோணத்தில் உள்ள மகா மக குளத்தில்தான் குளித்தாக வேண்டும் என்பதே, கும்பகோணம் மகா மக குளத்திற்கு உரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.

     சாபம் நீங்கிய வருணன்

    ஒரு சமயம் வருண பகவானுக்கு ஏற்பட்ட சாபமானது, மகாவிஷ்ணுவின் அருளால் நீங்கியது. அப்படி வருணனின் சாபம் நீங்கிய தினம் ஒரு மாசி மாத மகம் நட்சத்திரம் ஆகும். அவருக்கு சாபம் நீங்கிய தினத்தில் அனைத்து நீர் நிலைகளிலும், புனித நதியான கங்கை இருப்பதாக சொல்லப்படுகிறது.

    எனவே மாசி மகம் அன்று, நாம் கோவில்களில் உள்ள குளங்கள், புண்ணிய நதிகள், கடலில் நீராடுவதால், வருணனைப் போலவே, நம்முடைய சகல பாவங்களும் நீங்கும் என்பதாக ஐதீகம் உள்ளது.

    மாசி மகம் என்பது பெருமாள் கோவில்களில் மட்டுமல்லாது, சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள் என்று அனைத்து கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    `அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ ஹ்யவந்திகா, புரீத்வாரவதீ சைவ ஸப்தைதே மோக்ஷதாயிந' என்று சாஸ்திரங்களால் சொல்லப்பட்ட, முக்தியைத் தரும் ஏழு முக்கியமான திருத்தலங்களிலும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே இடம் காஞ்சிபுரம் ஆகும்.

    அந்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலிலும், வரதராஜப் பெருமாள் கோவிலிலும் மாசி மக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவதைக் காண முடியும்.

     தாட்சாயிணி அவதரித்த தினம்

    முன்பொரு முறை திருக்கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. சிவனின் கண்களை பார்வதி மூடியது சில நொடிகள்தான் என்றாலும், அது உலக உயிர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகும்.

    எனவே அத்தனை காலம் துன்பத்தை அனுபவித்த உயிர்களின் பாவங்கள், பார்வதியை அடைந்தது. தன் தவறை உணர்ந்த பார்வதி, "என் பாவங்கள் நீங்க என்ன வழி?" என்று ஈசனைக் கேட்டார். அதற்கு அவர், "நீ யமுனை நதிக் கரைக்குச் சென்று தவம் செய்" என்றார்.

    அதன்படியே யமுனை நதிக்கரைக்கு வந்த பார்வதிதேவி, தன்னை வலம்புரி சங்கின் வடிவமாக மாற்றிக் கொண்டு, தாமரைப் பூ ஒன்றில் அமர்ந்து தவம் செய்து வந்தாள். இந்த நிலையில் தட்சன் என்ற மன்னன், தனக்கு பார்வதியே மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.

    ஒரு முறை தட்சன் தன் மனைவியுடன் யமுனை நதியில் நீராட வந்தபோது, தாமரைப் பூவில் இருந்த வலம்புரி சங்கைக் கண்டான். அதை கையில் எடுத்தவுடன், அந்த சங்கு ஒரு அழகிய பெண் குழந்தையாக மாறியது. அதற்கு `தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாக கந்தபுராணம் எடுத்துரைக்கிறது. அப்படி அம்பிகையை தட்சன் கண்டெடுத்த தினம் `மாசி மகம்' என்கிறார்கள். அதன் காரணமாகவும் மாசி மகம் நட்சத்திரம் போற்றுதலுக்குரியதாக மாறியது.

    மாசி மகம் நாள் அன்று அருகில் உள்ள குளங்களிலோ, நதிகளிலோ, கடற்கரையிலோ, சுவாமி தீர்த்தவாரி செல்கின்ற இடத்திலோ `கங்கே ச யமுநே சைவ கோதாவரி சரஸ்வதி| நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு' என்ற மந்திரத்தைக் கூறி, வருண பகவானை தியானித்து நீராடுவது மிகுந்த புண்ணிய பலன்களை பெற்றுத் தரும்.

    ஓரிடத்தில் குளிக்கும்போது அந்த ஆலயத்தில் உள்ள தெய்வங்களின் நாமங்களைச் சொல்லி குளிக்க வேண்டும். தாமிரபரணி, காவிரி போன்ற இடத்தில் குளிக்கும்போது, அங்குள்ள நதிகளின் பெயரையும், சுவாமியின் பெயரையும் சொல்லி நீராட வேண்டும். புனித நதி, குளம், கடல் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது ஒற்றை துணி உடுத்தி குளிக்க வேண்டும். ஆடையின்றி குளிப்பது ஆகாது. சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதை தவிர்க்கவும். நீருக்குள் மலம், ஜலம் கழிப்பது பாவம்.

    முதலில் நீராடும் புனித தீர்த்தத்தின் நீரை கைகளால் தொட்டு தலையில் தெளிக்க வேண்டும். பின்னர்தான் கால்களை நீரில் நனைக்க வேண்டும். எடுத்தவுடன் கால்களை நீரில் நனைக்கக்கூடாது. நீராடும் போது முழுமையாக மூழ்கி எழ வேண்டும். நீராடியதும் ஈரமான துணிகளை குளத்தில், நதியில் விடுவதோ, கரையில் குவித்து போடுவதோ கூடாது.

     நீராடலின் வகைகள்

    நீராடுதல் என்றால், நாம் சாதாரணமாக குளிப்பது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர், நீராடுதல் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது, அதற்கு அதிபதியாக இருக்கக்கூடிய வருண பகவான் தான். நீராடுவதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    விபூதி ஸ்நானம்:-

    முறைப்படி தயார் செய்த விபூதியில், நீர் விட்டுக் குழைக்காமல் உடல் முழுவதும் பூசிக்கொள்வது. இதனை `பஸ்மோத்தூளனம்' என்றும் அழைப்பார்கள்.

    கோ தூளி ஸ்நானம்:-

    பசுக்கள் செல்லும் பொழுது அதன் காலடி குளம்புகளில் இருந்து வரக்கூடிய தூசி மிகப் புனிதமாக சொல்லப்பட்டுள்ளது. நிறைய பசுக்கள் செல்லும் பொழுது அவற்றின் குளம்புகளில் இருந்து மிக உயரமாக மண் துகள் கிளம்பும். அவை நம் உடலில் படுமாறு நிற்பதற்கு 'கோ தூளி' என்று பெயா்.

    திவ்ய ஸ்நானம்:-

    நன்றாக வெயில் அடித்துக் கொண்டிக்கும் நேரத்தில், சில சமயம் மழை பெய்யும். இது மிக விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நீரில் குளிப்பதற்கு `திவ்ய ஸ்நானம்' என்று பெயர்.

    மந்திர ஸ்நானம்:-

    குளிக்க முடியாத பொழுது, `ஆபோஹிஷ்டா' என்ற மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய தலையில் சிறிது நீரை தெளித்துக் கொள்ளும் முறை இது.

    பிராஹ்ம ஸ்நானம்:-

    இது மிகவும் சிறப்பான ஒரு குளியல். அதாவது நாம் சிறப்பான ஒரு பூஜையை முடித்திருக்கும் வேளையில், அந்த பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட கலசத்தில் மந்திர ஜெபங்களின் சக்தி நிரம்பியிருக்கும். இந்த கலச நீரை தலையில் விட்டு நீராடுவது 'பிராஹ்ம ஸ்நானம்' ஆகும்.

     மகரிஷிக்கு அருளிய பெருமாள்

    தல சயனப்பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம், `திருக்கடல்மல்லை' என்று அழைக்கப்படும் மகாபலிபுரம் ஆகும். ஒரு சமயம் புண்டரிகாட்சர் என்ற மகரிஷி இங்கு வாழ்ந்து வந்தார். அவர் இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது.

    அதாவது திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனை அடைவதற்காக, மல்லையில் உள்ள கடல் நீரை, கையால் இறைத்து வெளியேற்றி விட்டு, கடலுக்குள் செல்வது என்று முடிவெடுத்தார். அதன்படி தன் கைகளால் கடல் நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார்.

    இவரது பக்தியை கண்ட பெருமாள், ஒரு வயோதிக தோற்றத்தில் அங்கு வந்தார். பின்னர் புண்டரிகாட்சரிடம், ``நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். சாப்பிட்டுவிட்டு வாருங்கள். அதுவரை நான் கடல் நீரை இறைக்கிறேன்" என்றார். அதன்படியே முனிவரும் அங்கிருந்து சென்று, உணவருந்தி விட்டு திரும்பி வந்தார். அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. வயோதிகரைக் காணவில்லை.

     அப்போது அங்கே பெருமாள் திருவடியில் தான் வைத்து வழிபடும் தாமரைப் பூவையும், பள்ளிகொண்ட திருமாலையும் கண்டார். இதையடுத்து தனக்காக இறைவனே நேரில் வந்து கடல் நீரை இறைத்ததை உணர்ந்துகொண்டார். அந்த இடம் `அர்த்த சேது' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும் என்கிறார்கள்.

    • கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது.
    • பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது. அங்குள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான இங்கு, தங்கத்தில் செய்யப்பட்ட 2 அடி உயரத்தில் 13 கிலோ எடையுள்ள 7 யானை சிலைகள், அதைவிட சிறிய அளவிலான ஒரு யானை சிலை என 8 யானை சிலைகள் கோவில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும். அதன்படி ஆராட்டு விழாவை முன்னிட்டு ஏழர பொன்னான என்று கூறப்படும் தங்க யானை சிலைகள் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.

    ×