search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airpot"

    • குடியரசு தினத்தை முன்னிட்டு 25-ந்தேதி மற்றும் மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் சென்னை, காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த சின்கா, கபில்குமார் சரத்கர் ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை முழுவதும் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் உள்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு 25-ந்தேதி மற்றும் மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழாவையொட்டி எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதேபோல பாதுகாப்பு கருதி ரெயில்வே தண்டவாளங்களில் ரெயில்வே போலீசார் ரோந்து செல்கின்றனர். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபர்களின் அடையாள அட்டை, முகவரி ஆகியவற்றை பெற்று ஆய்வுக்கு பின்னரே அவர்களை போலீசார் விடுவிக்கின்றனர்.

    டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுபடி கடலோர பகுதியில் 24 மணிநேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா நடைபெறும் மெரினா கடற்கரையின் காமராஜர் சாலையை இருவாரங்களுக்கு முன்பே போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோயம்பேடு சந்தை, புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் பயணிகளை போலீசார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சென்னையில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த வாரம் முதல் விமான நிலையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு எரி பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தவிர்த்து கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு 1½ மணிநேரத்திற்கு முன்னதாக வரும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.

    வருகிற 30-ந்தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.
    • அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இவர்களை இறக்கி விடவும், வருபவர்களை ஏற்றி செல்லவும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கார்கள் வந்து செல்கின்றன.

    சென்னை விமான நிலையத்தில் தனியார் கார் பார்க்கிங், பிரீபெய்டு கார்கள் பார்க்கிங், ஓலா, உபேர் கால் டாக்சி பார்க்கிங், பயணிகளின் கார்கள் என தனி பார்க்கிங் வசதி உள்ளது.

    ஆனால் சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது. இதில் கார் பார்க்கிங், வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு அறைகள் கட்டப்படுகிறது.

    தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கார் நிறுத்தும் வளாகம் அடுத்த மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    இது குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பிரதிநிதிகள், ஒலிம்பியா நிறுவன அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆகஸ்ட் 1-ந்தேதி 2400 கார்களை நிறுத்தும் திறன் கொண்ட ஆறு அடுக்கு கார் நிறுத்த வளாகத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை சென்னை இந்திய விமான நிலையங்கள் ஆணைய தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிகிறது.

    ×