search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carry"

    • சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

     காங்கயம்

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தனர். பொதுமக்கள் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயிகளின் தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறுத்தையின் வேட்டையை கண்காணிக்க தங்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தியின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி ராஜாமணி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

    அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு ராஜாமணி வெளியே ஓடி வருவதை பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நேரில் சென்று கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

    • சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றல் எளிமையாக நடந்தது.

    இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7:40 மணிக்கு 1610 திருப்பால் குடங்களை ஏராளமான பெண்கள் எடுத்து சென்றனர். ஊர்வலம் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக சென்றடைந்தது.

    காலை 11 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் தொடங்கியது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பால்களை வேத மந்திரங்கள் ஓத சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியால் இன்று அதிகாலை முதலே சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது.

    பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    ×