search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman kidnapped case"

    • தொழிலதிபர வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலை செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 70). மொத்த பிராய்லர் கோழிக்கறி வியாபாரம், முட்டை உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். சொந்த விவசாய தோட்டங்களும் உள்ளது.

    நேற்றுகாலை ஆணைமலையன்பட்டி தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங்கரே உத்தரவின் பேரில் அவரை கடத்திச் சென்ற காரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக தேடினர். ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்திச் சென்றபோது வைகை புதூர் பிரிவில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அதிசயத்தை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

    இதனிடையே வாகனம் வைகைபுதூர் வழியாக தப்பிச் செல்வதை வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒத்தவீடு வழியாக சென்ற அந்த வாகனத்தை மேலக்காமக்காபட்டியில் வைத்து பிடித்தனர். அந்த காரை மதுரை மாவட்டம் திருநகர் சக்களைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகரை சேர்ந்த திருமுருகன் மகன் அஜீத் (26), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுசிகன் (22) மற்றும் கூழ் என்ற அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் கூலிப்படையாக இருந்து அதிசயத்தை கடத்தியதாகவும் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றி அதிசயத்தை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்நிலையில் அதிசயம் தோட்டத்தில் காவலாளியாக வேலைபார்த்த சங்கரலிங்கம் (65) என்பவர் நேற்று மாலை தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் கடந்த 3 மாதமாகத்தான் இங்கு வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி அங்காளஈஸ்வரி இறந்து விட்டதால் அவரது தங்கையான மீனா (46) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அதிசயத்திற்கு சொந்தமான தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    அதிசயத்தை கடத்திய கூலிப்படை பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் சங்கரலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. சங்கரலிங்கத்தின் செல்போனில் கடத்தல்காரர்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூலிப்படை பிடிபட்டுள்ள நிலையில் கடத்தலுக்கு மூளையாக இருந்தது யார் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படையினரை துரித வேகத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

    சென்னை செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரை மீட்ட போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இருப்பினும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் அவ்வப்போது வன்முறை செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    சென்னையை பொறுத்தவரையில் ரவுடிகளுக்கு இணையாக வழிப்பறி கொள்ளையர்களும் அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களையும் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

    ஆனால் குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசார் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரர் ஏழுமலை சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிடிபட்ட ரவுடிகளில் ஒருவனான ஆனந்தன், என்கவுண்டரில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானான்.

    தென்சென்னை பகுதியில் நடந்த என்கவுண்டர் பரபரப்பு அடங்கும் முன்னரே வடசென்னையில் தொழில் அதிபரை கடத்திய ரவுடிகள் 8 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (53) லாரி அதிபரான இவர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2-ந்தேதி திடீரென கணேசன் மாயமானார். மாலையில் வெளியில் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை கணேசன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்தனர்.

    நேற்று மாலை வரையில் வீடு திரும்பாததால் இது பற்றி கணேசனின் உறவினர் ராமச்சந்திரன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் ராமச்சந்திரனுக்கு போன் செய்த கணேசன், தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

    இதுபற்றி போலீசில் தெரிவிக்க வேண்டாம் என்றும், பணத்தை தயார் செய்யுமாறும் கூறிவிட்டு கணேசன் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இந்த தகவல் தெரிய வந்ததும், கணேசனை பத்திரமாக மீட்கவும், கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டையை தொடங்கினர். வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் மேற்பார்வையில், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர் கலைச்செல்வன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    புழல் உதவி கமி‌ஷனர் பிரபாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார் நேற்று இரவு முழுவதும் கடத்தல் கும்பலை சல்லடை போட்டு தேடினர்.

    கடத்தப்பட்ட லாரி அதிபர் கணேசனின் செல்போனை வைத்து அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். கூடுவாஞ்சேரி பகுதியில் கணேசன் காரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு 9.30 மணி அளவில் போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இந்த கடத்தலுக்கு செங்குன்றத்தை சேர்ந்த வடகரை சக்தி என்ற சக்திவேல் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரையும் அவரது கூட்டாளிகள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூரை சேர்ந்த சுமன், எண்ணூர் மதன் குமார், ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை மண்டபம் பகுதியை சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டை அசோக் குமார், செங்குன்றத்தை சேர்ந்த ராஜேஷ், சதீஷ் குமார், சிவா ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

    இவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் கால் நகத்தை பிடுங்கி எறிந்து விடுவோம் என்றும் கணேசனை ரவுடிகள் மிரட்டியுள்ளனர். இதற்காக கட்டிங்பிளேயர் போன்ற ஆயுதங்களையும் காட்டி கணேசனை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 8 ரவுடிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    ×