search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aravenue"

    • சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    அரவேனு,

    அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோத்தகிரி அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஜக்கனாரை ஊராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் திறக்க ஜக்கனாரை ஊராட்சி தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி நேற்று வாடகை கட்டிடத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட முதல் நாளில் சுமார் 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் ஊராட்சி தலைவர் கூறுகையில் விரைவில் வருவாய்த்துறை அல்லது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் சபீலா, உதவியாளர் தீபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கோத்தகிரி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திமிதித்தனர்

    ஊட்டி, ஜூன்.9-

    கோத்தகிரி அரவேனு அருகே தவிட்டுமேட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி காலை காளி பூஜை, முனீஸ்வரர் பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    4-ந் தேதி அம்மன் பவனி வருதல், 5-ந் தேதி பூ கரகம் எடுத்து வருதல், அக்னி சட்டி ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 6-ந் தேதி காலை காளியம்மாள் நாக பூஜையும், தொடர்ந்து முனீஸ்வரர் மற்றும் முன்னடியானுக்கு கிடா வெட்டி பூஜை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலை அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

    ×