search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Drinking Water"

    கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையம் முடங்கியதால் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளிர்பதன கிடங்குகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களில் அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் திட்டம் வரவேற்பை பெற்றன.

    பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 2013 செப்டம்பர் 15-ந்தேதி அம்மா குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில் சுமார் 10.5 கோடி மதிப்பீட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

    நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கும்மிடிப்பூண்டி உற்பத்தி ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்களிலும் நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தனியார் நிறுவனங்கள் ரூ.20 முதல் ரூ.25-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை விற்று வந்தன. இதனால் அம்மா குடிநீர் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக அம்மா குடிநீர் திட்டம் மாநிலம் முழுவதும் 377 இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது.

    அம்மா குடிநீர்


    சென்னையில் மட்டும் 53 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    கும்மிடிப்பூண்டி ஆலை தொடங்கப்பட்ட நேரத்தில் அந்த ஆலையின் உற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் லிட்டர் வரை இருந்தது. பின்னர் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது.

    சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் குறைந்ததால் உற்பத்தி 90 ஆயிரம் முதல் 1.5 லட்சம் லிட்டர் வரை மட்டுமே இருந்தது. 2019 நீர் வடிகட்டிகளில் சேர் மற்றும் மண் குவிந்ததால் உற்பத்தி குறைந்தது. இதனால் நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. எனவே விற்பனை குறைந்தது. மேலும் கொரோனா காலத்தில் பேருந்துகள் செயல்பட வில்லை.

    கும்மிடிப்பூண்டி குடிநீர் உற்பத்தி ஆலையை மட்டுமே நம்பி விரிவுப்படுத்தப்பட்ட அம்மா குடிநீர் திட்டமானது உற்பத்தி குறைந்ததன் காரணமாக மெல்ல மெல்ல முடங்கத் தொடங்கியது.

    தற்போது அம்மா குடிநீர் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை மாநிலம் முழுவதும் விற்பனையை நிறுத்தி உள்ளது. விற்பனை நிலையங்கள் நேர அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையம் முடங்கியதால் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளிர்பதன கிடங்குகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையத்தில் உள்ள எந்திரங்கள் சமீபத்தில் செயலிழந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. குடிநீர் உற்பத்தி ஆலை மூடப்படவில்லை. ஆனால் செயல்படாமல் உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

    அம்மா உணவகத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.


    தமிழகத்தில் அனல் காற்றுடன் கோடை வெயில் அதிகரிப்பதால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் அனல் காற்றுடன் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் தாகத்தை போக்க ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்யவில்லை.

    இதனால் பயணிகள் அம்மா குடிநீர் பாட்டிலை வாங்கி குடித்து வந்தனர். சில தினங்களாக அம்மா குடிநீர் விற்பனை மையத்தில் குடிநீர் பாட்டிலை பார்க்க முடியவில்லை. இதனால் ஏழை,எளிய மக்கள் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை அதிக விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் , திருப்புல்லாணி, சேதுக்கரை, தேவிபட்டினம், உப்பூர் ஏர்வாடியில் ஆன்மீக தலங்கள் உள்ளதால் வேண்டுதலுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தலைநகராக விளங்கும் ராமநாதபுரத்தில் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

    இவர்கள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி பின்னர் வேறு பஸ்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். குடிநீருக்காக அம்மா விற்பனை மையம் சென்றால் அங்கு குடிநீர் இருப்பதில்லை. ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை மையம் கண்காட்சி பொருளாக உள்ளது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குடிநீர் பாட்டில் கிடைப்பதில்லை.

    இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி சங்கர் கூறுகையில், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பஸ் நிலையத்தில் தட்டுப்பாடு இல்லாமல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் விற்பனையாளரிடம் கேட்டால் குறைவான எண்ணிக்கையில் பாட்டில் சப்ளை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார். ராமநாதபுரத்திற்கு மட்டும் ஏன் குறைவான எண்ணிக்கையில் குடிநீர் அனுப்புகின்றனர்? என்பது புரியாத புதிராக உள்ளது.

    தனியார் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அம்மா குடிநீர் பாட்டில் பதுக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்ப உள்ளேன் என்றார்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே உலுக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட் டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த வாரம் ரூ.4 கோடி மதிப்பில் 42 வகையான நிவாரணப் பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் 10 லாரிகளில் இந்த குடிநீரை கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர்கள் மணிமாறன், மணி வண்ணன், கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் முத்து கிருஷ்ணன், பொது மேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    ×