search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all constituencies"

    இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Thangamani

    குடியாத்தம்:

    தமிழகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் களப்பணிகளை அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பூத்கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை என களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு படிப்படியாக கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் யாரையும் இழுத்து சேர்க்கவில்லை. கழகத்தில் தானாக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சிறப்பாக நிர்வாகத்தை கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து தற்போது வரை கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

    மற்ற கட்சிகளில் இருந்து அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. இங்கு அனைவரும் வந்து சேரலாம் என்பது எங்கள் நோக்கம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் சேர முயற்சி செய்தார். நாளை தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்.

    தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேவையான நிதியை பெற முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கும். இடைத்தேர்தலுக்காக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangamani

    ×