என் மலர்tooltip icon

    வழிபாடு

    பகை விரட்டும் திரிசூலம்
    X

    பகை விரட்டும் திரிசூலம்

    • சிவபெருமானின் படைக்கலங்களில் முதன்மையானது, திரிசூலம்.
    • அத்தி, கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.

    இந்து கடவுள்கள் ஒவ்வொருவரும் தங்கள் "கைகளில் ஒவ்வொருவிதமான ஆயுதங்கள் தாங்கி காட்சி தருவார்கள். இந்த ஆயுதங்கள், தீமையில் இருந்து பக்தர்களை காக்கின்றன. இவற்றில் சிவபெருமானின் படைக்கலங்களில் முதன்மையானது, திரிசூலம். பலர், திரிசூலத்தை சிவபெருமானின் அம்சமாக கருதியும் வழிபடுகிறார்கள்.

    திரிசூலத்தின் தலைப்பகுதி கூர்மையான மூன்று பகுதிகளை கொண்டது. இதனால் தான் 'திரிசூலம்', 'முத்தலைச் சூலம்' என்று அழைக்கப்படுகிறது. திரிசூலம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களை அழித்து மோட்சம் தருகிறது. திரிசூலத்தை ஏந்தி நிற்பதால் சிவபெருமான், 'சூல பாணி' என்றும், 'சூலதரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    திரிசூலத்தின் மூன்று முனைகளும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கின்றது. திரிசூலம் அஸ்திரங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பதால் 'அஸ்திர ராஜன்' என்றும் அழைக்கப்படுகிறது.

    காசி நகருக்கு 'அவிமுத்தம்' என்றும் பெயர் உண்டு. இதற்கு 'அழிவற்றது' என்று பொருள். இந்தத் தலத்தை திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பொன்னால் திரிசூலம் செய்து, அதைச் சுற்றி எட்டு ஆயுதங்களை நிலைப்படுத்தி, அஸ்திர பூஜை செய்வர். அத்தி, கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.

    பராசக்தி, காளி, பைரவர் ஆகிய தெய்வங்களின் கைகளிலும் திரிசூலம் காணப்படுகிறது. கிராம காவல் தெய்வமான பிடாரி ஆலயங்களிலும் திரிசூலமே படைக்கலமாக உள்ளது. பகையை வென்று சுகமாக வாழவும், ஞானம் பெற்று சிறப்புடன் விளங்கவும் திரிசூலத்தையே சிவபெருமானாக நினைத்து வழிபடுகிறார்கள். திரிசூலத்தை சந்திரசேகரர் திருவுருவத்தில் சாற்றி வழிபடுவது சிறந்த பலன் தரும்.

    Next Story
    ×