search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் விடுமுறையால் விபத்துகள் அதிகரிப்பு: அரசு ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்
    X

    தொடர் விடுமுறையால் விபத்துகள் அதிகரிப்பு: அரசு ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்

    • சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

    அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.

    அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.

    இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

    இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது

    ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×