பாலியல் வன்கொடுமை வழக்கில் ரூ.42 கோடி அபராதம்- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு பின்னடைவு

டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ரூ.42 கோடி அபராதம்- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு பின்னடைவு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.

டிரம்புக்கு எதிராக அவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை டிரம்ப் மறுத்து வந்தார்.

இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இதனை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த ரூ.42 கோடி அபராதத்தை பெடரல் கோர்ட்டு உறுதி செய்தது.

அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில் டிரம்புக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com