என் மலர்
கத்தார்
- முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் ஜெர்மனி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
- இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின. நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
- இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப் பிரிவில் உள்ள மொராக்கோ, குரோசிய அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து தவறவிட்டதால் கடைசிவரை கோல் அடிக்கப்படவில்லை. எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- ஆட்ட முடிவில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.
சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
- 4வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 9வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
- இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டிராவில் முடிந்தது
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2-வது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு 10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
- அமெரிக்கா,வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
- அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.
இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
- ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தோகா:
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.
பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- 2வது பாதியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின.
தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.
- உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
- முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.
தோகா:
உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.
இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்
எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.
டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.
உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.






