என் மலர்
உலகம்

பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் வறுமையில் வாடும் 7 கோடி மக்கள் - 11 ஆண்டுகளில் புதிய உச்சம்
- தேசிய வறுமை விகிதம் 29%-ஐ எட்டியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.
- பலூசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 50%, அதாவது இரண்டு பேரில் ஒருவர் வறுமையில் வாடுகின்றனர்.
பாகிஸ்தான் திட்டமிடல்&மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் சுமார் 7 கோடி மக்கள் தற்போது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
அங்கு, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதம் ரூ. 8,484 தேவைப்படுகிறது. இந்த தொகைக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
அதன்படி அங்கு தேசிய வறுமை விகிதம் 29%-ஐ எட்டியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். 2018-19 ஆண்டை விட தற்போது வறுமை 32% அதிகரித்துள்ளது.
கிராமப்புற வறுமை 28.2%-லிருந்து 36.2% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற வறுமை 11%-லிருந்து 17.4% ஆக அதிகரித்துள்ளது.
மிக மோசமாக பலூசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 50%, அதாவது இரண்டு பேரில் ஒருவர் வறுமையில் வாடுகின்றனர்.
தனி நாடும் கோரும் கிளர்ச்சியாளர்களால் பலூசிஸ்தான் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.
பாகிஸ்தானின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருமான இடைவெளி அதிகரித்துள்ளது என திட்டமிடல் &மேம்பாடு அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.






