என் மலர்
ஆப்கானிஸ்தான்
- ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர்.
- இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 21-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
- ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.
- பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
காபூல்:
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.
பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.
ஆனாலும் பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் அங்கு 37 சினிமா படங்களும், சில ஆவணப்படங்களும் திரையிட தயாராக உள்ளன.
ஆனால் இந்த அனைத்து படங்களிலும் நடிகையாக அதிபா முகமது என்ற பெண் மட்டுமே நடித்துள்ளார்.
- தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
- அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல் அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த நிலையில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் 2¼ கோடி இணையதளங்களை முடக்கியுள்ளதாக தலிபான் அரசின் தகவல் தொடர்பு மந்திரி நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இதுவரை 2 கோடியே 34 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஒன்றை தடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு பெயரில் இணையதளத்தை தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது" என்றார்.
மேலும் இது போன்ற இணையதளங்களை ஒடுக்க, தலிபான் அரசுடன் ஒத்துழைக்க பேஸ்புக் தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
- ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாயினர்.
- சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வருகிறது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று ஏராளமானோர் வழக்கமான தொழுகைக்கான குவிந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 21 பேர் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாயினர். 33 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து ஆப்கன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் போராட்டம்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டனர்.
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
- தலிபான் மத குருவான ஷேக் ரஹி முல்லா என்பவர் இறந்தார்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த போதிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் அங்கிருந்த தலிபான் மத குருவான ஷேக் ரஹி முல்லா என்பவர் இறந்தார்.
இதனை துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி உறுதி படுத்தி உள்ளார்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டவன் ஏற்கனவே தனது காலை இழந்தவன். அவன் செயற்கை காலை பொருத்தி இருந்தான்.
அவன் எந்த அமைப்பை சேர்ந்தவன் என தெரிய வில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கான முழுமையான காரணம் என்ன வென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
- சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.
தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- பரபரப்பு நிறைந்த தெரு ஒன்றில் குண்டு வெடித்தது.
- வெடிகுண்டு தாக்குதல் குறித்து தாலிபான் அரசு விசாரணை
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பரபரப்பாக காணப்படும் வணிக நிறுவனங்கள் நிறைந்த தெருவில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்.
தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக தனது டெலிகிராம் சேனலில் சன்னி முஸ்லிம் போராளிக் குழு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உதவவும், உயிரிழப்புகளை மதிப்பிடவும் ஒரு விசாரணைக் குழு குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு நடத்தி வருகிறது.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக்.
- அனஸ் மல்லிக்கின் கார் டிரைவர் மற்றும் குழுவினர் தலிபான்கள் பிடியில் உள்ளனர்.
காபூல்:
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக். இவர் இந்தியாவில் உள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆப்கானிஸ்தானுக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றார். அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெறுவதை பற்றியும், அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது தொடர்பாகவும் செய்தி கேசரிக்க சென்றார்.
இந்த நிலையில் அனஸ் மல்லிக் திடீரென்று மாயமானார். அவரை தலிபான்கள் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. இதை அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அனஸ் மல்லிக்கின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் தூதரகம், தலிபான் அரசிடம் தகவல் கேட்டது. அதன் பின் பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தலைநகர் காபூலில் பத்திரமாக இருப்பதாகவும், அவருடன் தூதரகம் தொடர்பில் இருக்கிறது என்பதையும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி உறுதிப்படுத்தினார்.
தலிபான்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அனஸ் மல்லிக் கூறும்போது, 'செய்தி சேகரிப்பதற்காக காபூலுக்கு சென்றடைந்த போது என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. அப்போது தலிபான்கள் சிலர் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றனர். எனது செல்போனை பறித்து கொண்டனர். நான், கார் டிரைவர் உள்பட குழுவினர் பயங்கரமாக தாக்கப்பட்டோம்.
எங்களின் கைகள், கண்கள் கட்டப்பட்டு தலிபான்களால் விசாரிக்கப் பட்டோம். பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்ட நான் நேற்று விடுவிக்கப் பட்டேன் என்றார்.
அனஸ் மல்லிக்கின் கார் டிரைவர் மற்றும் குழுவினர் தலிபான்கள் பிடியில் உள்ளனர். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகையாளர் டேவிஷ் சித்திக், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் 93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நள்ளிரவு 12.38 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.






