என் மலர்
சினிமா செய்திகள்

'ஜன நாயகன்' தணிக்கை வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்!
- நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும்
- வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம்
ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் பின்னணி
ஜனவரி 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனவரி 27, 2026 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.
ஜன நாயகன்
ஹெச்.வினோத் நடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி, பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.






