என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா
- பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
- சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள்.
மதுரை:
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார்.
தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.






