என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #PMModi திருச்சியில் வருகிற 11-ந்தேதி என்டிஏ பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு
    X

    #PMModi திருச்சியில் வருகிற 11-ந்தேதி என்டிஏ பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு

    • கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
    • பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல், மாலை 7.30 மணி வரை நடைபெறுகிறது.

    திருச்சி:

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பான சூழலில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினர், ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர களப் பணியை தொடங்கியுள்ளனர்.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

    அந்த வகையில் மீண்டும் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற உள்ள அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பஞ்சப்பூரில் விழா நடைபெறும் பகுதிக்கு செல்கிறார். முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

    அதன் பின்னர் அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல், மாலை 7.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு எடமலைப்பட்டி புதூர் வழியாக காரில் திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகர பொறியாளர் சிவபாதம், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் வருகை, பாதுகாப்பு, பொதுமக்கள், கட்சியினர் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×