என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனுடன் சந்திப்பு... மீண்டும் சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன்
- வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார்.
- சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர். கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
அண்மையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. உட்கட்சி பூசல்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.






