என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
- இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங்கும், 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் அனாஹத் சிங்கும் வென்றனர். இறுதியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். சொந்த நாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், ஜோஸ்னா, அபய்சிங், செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் நால்வரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டு தொடரை சென்னையில் நடத்தியதும் சேர்ந்து இச்சாதனை வெற்றியானது தமிழ்நாட்டின் விளையாட்டுச் சூழலின் ஆழத்தையும், நம்பிக்கையையும், சிறப்பையும் மீண்டுமொரு முறை நிலைநாட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.






