என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான் - மணிசங்கர் அய்யர்
- இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், "நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். அந்த இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் துணை நிற்பார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க அவரால் மட்டுமே முடியும்.
வெற்று முழக்கங்களை மட்டும் எழுப்பாமல் இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் பேசியது கேரளா காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






