என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழர் என்பதால் மட்டும்... துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து கனிமொழி விளக்கம்
- எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
- சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது மக்களுக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முடிவில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது மக்களுக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பாஜகவின் இந்துத்துவ அரைசியலை எதிர்த்து பேசக்கூடியவர். அதனால் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளோம்.
இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்; அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை (சி.பி.ராதாகிருஷ்ணன்) எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை (சுதர்சன் ரெட்டி) முன்மொழிந்திருக்கிறோம். நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர், அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர். அவர்கள் (பாஜக) தேர்வு செய்த வேட்பாளர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது" என்று தெரிவித்தார்.






