என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரிய இடம் கொடுத்திருந்தால்... கூட்ட நெரிசல் சம்பவத்தில் சந்தேகம் உள்ளது - ஹேமமாலினி
- பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.
- இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த குழுவினர் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து பேசினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களையும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், என்.டி.ஏ. குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது ஹேமமாலினி எம்.பி. கூறியதாவது:
* பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.
* விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர்.
* விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடத்தை போலீசார் கொடுத்து இருக்கிறார்கள்.
* பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.
* கூட்ட நெரிசல் சம்பவத்தில் சந்தேகம் உள்ளது.
* இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
* என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம் என்று கூறினார்.
அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,
* உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை.
* ஆளும் கட்சியும், அரசும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும்.
* த.வெ.க.வும் பதில் சொல்ல வேண்டும்.
* கரூர் துயர சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






