என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா?' - இபிஎஸ் கேள்வி!
- இதுதான் கருணாநிதி குடும்பத்தினர் சந்திக்கும் கடைசித் தேர்தல்
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
"இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்தார். இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. கெஞ்சி, அடிமையாகி காங்கிரஸுடம் திமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பரஸ்பர உணர்வோடு தே.ஜ. கூட்டணி இணைந்துள்ளது. நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம். நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. ஒரே கொள்கையின்கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மோசமான, கையாலாகத அரசு திமுக அரசு. அந்த அரசை அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் கருணாநிதி குடும்பத்தின் கடைசித் தேர்தல்.
விவசாய நிலங்களை அபகரிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி. காவிரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை முடக்கியது விடியா திமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசினார்.






