என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காமராசர் இறந்தபோது அண்ணா அழுதாரா? - சீமானின் பேச்சும் உண்மையும்...
- பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள்
- 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா, 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். கொள்கை முரண் என்பது வேறு, பாசம் என்பது வேறு... பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர் சந்திக்கவில்லை. அதன்பின்பு நிக்சன் இந்தியா வரும்போது காமராசரை சந்திக்க விரும்புகிறார்கள். அப்போது அண்ணாதுரையை சந்திக்க விரும்பாத நிக்சனை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்று காமராசர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






