என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவர் சேர்க்கை இல்லை என கூறி 207 அரசு பள்ளிகளை மூடுவதா? அன்புமணி கண்டனம்
- பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
- கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை தி.மு.க. அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பள்ளிகள், கல்லூரிகளை சீரழித்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல. இதை உணர்ந்து மூடப்பட்டு வரும் 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






