search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
    X

    தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

    • இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது- அமித் ஷா
    • நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது- உதயநிதி

    இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும்'' என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' (டுவிட்டர்) வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    ''இந்திதான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது- பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது'' என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து.

    தமிழ்நாட்டில் தமிழ்- கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது.

    இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×