search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம்- அமைச்சர் பி.கே. சேகர்பாபு
    X

    சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம்- அமைச்சர் பி.கே. சேகர்பாபு

    • என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
    • 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.

    என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

    அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×