search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது என்ன? வானதி சீனிவாசன் பதில்
    X

    நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது என்ன? வானதி சீனிவாசன் பதில்

    • தமிழகத்தில் முதல்முறையாக மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
    • தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை.

    கோவை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் வங்கி கணக்குகளுக்கு ரூ. 3749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா,ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும்.

    தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சனைகளுக்காக மட்டுமே நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். கடனுதவி வழங்கும் விழா அரசு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி மந்திரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி மந்திரி வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதி மந்திரி மகிழ்வாக இருந்தார். அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.

    கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். சென்னையில் நேற்று கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மாநில தலைவர் இல்லாமல் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படலாம்.

    தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×