என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விளவங்கோடு தொகுதியில் பெண் வேட்பாளர்களை களமிறக்கிய பா.ஜனதா-அ.தி.மு.க.
    X

                                                     பா.ஜனதா வேட்பாளர் நந்தினி, அ.தி.மு.க. வேட்பாளர் ராணி


    விளவங்கோடு தொகுதியில் பெண் வேட்பாளர்களை களமிறக்கிய பா.ஜனதா-அ.தி.மு.க.

    • பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • முதல்முறையாக இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், விஜயதரணி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் காலியான விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை பொருத்தமட்டில் கன்னியாகுமரி-கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல்முறையாக இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார்.

    பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வை போன்று பெண் வேட்பாளரையே களமிறக்கிவிட்டது.

    பாரதிய ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள நந்தினி பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். கட்சியில் மண்டல நிர்வாக குழு உறுப்பினராகவும், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்த நந்தினி தற்பொழுது மாவட்ட செயலாளராக உள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகள் பேசும் திறமை கொண்டவர் நந்தினி. இவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

    அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்று இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் அல்லது தற்போதைய மாவட்ட தலைவராக உள்ள பினு லால்சிங்கை களம் இறக்க கட்சி தயாராகி வருகிறது.

    ஆனால் இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் தேர்தல் பணியை தொடங்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் விளவங்கோடு தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் அந்த தொகுதி முடிவு அனைவராலும் எதிர்பார்க்க்க்கூடிய ஒன்றாக இருக்கிறது.

    இந்த சூழலில் வேட்பாளர் யார் ? என்று அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதாவினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இதனால் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சி வேட்பாளர்களுமே தொகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக முந்திரி தோட்ட தொழிலாளர் பிரச்சினை, ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். மேலும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் உறுதியளிக்கின்றனர். அவர்கள் நேரில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

    Next Story
    ×