search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்- விஜய் வசந்த் மீண்டும் நேரடி மோதல்?
    X

    கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்- விஜய் வசந்த் மீண்டும் நேரடி மோதல்?

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
    • அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.


    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


    பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.

    நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×