என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
- கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.
- பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், பாராளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறையும் 9 தொகுதிகள் குறையாமல் தி.மு.க.விடம் கேட்டு பெற தீர்மானித்துள்ளார்கள்.
கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், வைகோ மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
எனவே ஓரிரு தொகுதி மாறலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மாறினால் வேறு எந்த தொகுதியை கேட்பது என்றும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கட்சி வலுவிழந்து இருப்பதால் தான் தி.மு.க.விடம் சீட்டுக்கு போராட வேண்டி உள்ளது. எனவே பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
மேலும் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே எம்.பி.க்களாக இருப்பவர்கள் விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன.






