search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
    X

    குன்னூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்

    • கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர்.
    • யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம், கிரேக்மோர் உள்ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் அவை காட்டுக்குள் செல்லாமல், தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளன. மேலும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நாக்குநெறி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து ருசி பார்த்தது. அந்த நேரத்தில் பழனியம்மாள் வீட்டில் எவரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பின்னர் அந்த காட்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக விழித்துக்கொண்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்றனர்.

    இதற்கிடையே கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கூட்டம் வழக்கம்போல் அருகே உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.

    எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மனுநீதிநாள் முகாம், வனத்துறை அலுவலகம் மட்டுமின்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனாலும் அந்த யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகளை கும்கிகள் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×