என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜனதா அழைப்புக்காக காத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம்: ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை?
- வலிய சென்று பா.ஜனதாவை ஆதரிக்கிறோம் என்று சொன்னால் மரியாதை இருக்காது என்பதால் பா.ஜனதாவின் அழைப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.
- பாரதிய ஜனதாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் வியூகம் அமையும் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணி முறிந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பா.ஜனதா கட்சியோடு நெருக்கம் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
ஆனால் வலிய சென்று பா.ஜனதாவை ஆதரிக்கிறோம் என்று சொன்னால் மரியாதை இருக்காது என்பதால் பா.ஜனதாவின் அழைப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.
அவ்வாறு அழைப்பு வரும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திப்பார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி. தினகரனுக்கு தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வில் உள்ள ஒரு பிரிவினர் வாக்குகளுடன் சமுதாய ஓட்டுகள் கணிசமாக உள்ளதால் அந்த ஓட்டுகள் பாரதிய ஜனதாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் வியூகம் அமையும் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






