search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    • இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.
    • இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது.

    இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி இருந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது.

    இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது வக்கீல் வாதம் 7 நாட்கள் நடைபெற்றது.

    இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், இந்த வழக்குகளில் எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் நான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது.

    இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 8 மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர உரிமையில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×