search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடையா?
    X

    பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடையா?

    • சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    * உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

    * முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    * விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×