search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி கிடையாது: கே.பி.முனுசாமி பேட்டி

    • சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜக.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.

    அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

    சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உண்மை தெரியவரும். அது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    சிலர் தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு பேசுகிறார்கள். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

    அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

    அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. அது 2024 பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி கிடையாது அ.தி.மு.க. சார்பில் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம்.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் மாவீரன் என்றார்கள்.

    காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×