search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி
    X

    தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

    • தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
    • தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை 13,000 கோடி ரூபாய் பெறப்பட்ட மொத்த நன்கொடையில் ரூபாய் 6572 கோடியை பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது.

    இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

    தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூபாய் 1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6812. இதன்மூலம் ரூபாய் 6812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்டுகளுக்கு பா.ஜ.க. செய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. செய்த சட்டவிரோத உதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? இதன்மூலம் இந்திய ஜனநாயகம் தேர்தல் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதி வழங்கினாலும், மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



    எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ அதற்கு முன்பாக வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்று மோடி அரசின் பாசிச, ஜனநாயக விரோத போக்கை கண்டிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×