என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தியது ஏன்?- கே.எஸ்.அழகிரி கேள்வி

    நடிகர் விஜய் வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள் என்றும் அவர் மட்டும்தான் ரூ.80 கோடி ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாரா? என்றும் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். 22 நாள் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

    இந்த போராட்டம் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. மேலும் மோடியும் அமித்ஷாவும் காந்தி வழியில் உள்ள இந்தியாவை மதசார்பின்மை நாடாக ஆக்கி வருகின்றனர்.

    ஏனென்றால் அசாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்களை குடியுரிமை அல்லாதவர்கள் என கணக்கெடுத்து உள்ளனர். இதில் இஸ்லாமியர்கள் 10 லட்சம் பேரும், இந்துக்கள் 9 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களை வெளியேற்ற மோடிக்கு வாகனம் இருக்கிறதா? எந்த நாட்டிற்கு அனுப்புவார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்தி பேசும் 7 மாநிலத்தில் வெற்றி பெற்றால் போதும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற அளவில் உள்ளது.

    நடிகர் விஜய் வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள். அவர் மட்டும்தான் ரூ.80 கோடி ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாரா? மற்ற நடிகர்கள் எல்லாம் 80 ரூபாய் 100 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்களா? இது ஜனநாயக நாடு. மற்றவர்களையும் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்.

    பா.ஜ.க. கொண்டு வந்த இந்த குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. வின் 11 வாக்குகளும், பா.ம.க. 1 வாக்கு உள்பட மொத்தம் 12 வாக்குகள் போட்டதால்தான் இந்த சட்டத்தை இயற்றப்பட்டது. பா.ஜ.க. கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமைச் சட்டம் இந்திய மக்களை சீர்குலைக்கும் சட்டம்.

    வேளாண்மை மண்டலமாக அறிவித்தது வெறும் பெயரளவுக்குத்தான். ஆனால் காவிரி டெல்டா வேளாண் மண்டலத்தில் என்ன தொழில் செய்யலாம் என்ன தொழில் செய்யக்கூடாது என்பதை எடப்பாடி அரசு தெளிவாக சொல்லவில்லை. 25 லட்சம் விவசாயிகள் 30 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்று கூறவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மணிரத்தினம், இளைஞர் அணி செயலாளர் கமல் மணிரத்தினம், மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, செந்தில்நாதன், மணிமொழி, மகளிரணி தலைவி கரோலின் அண்ணாதுரை, இளைஞர் அணி மாவட்ட தலைவர் தியாகராஜன், நகர தலைவர் அன்வர்ஷானு, குமராட்சி வட்டார தலைவர் பாபு உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×