search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களை படத்தில் காணலாம்.

    செங்கல்சூளை தொழிலாளி சேற்றில் அமுக்கி கொலை- கடலூரில் 3 வாலிபர்கள் கைது

    கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல்சூளை தொழிலாளி சேற்றில் அமுக்கி கொலை செய்தது தொடர்பாக கடலூரில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    புதுவை மாநிலம் கரிக்கலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தால்ராயன் (வயது 48). இவர் அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா. கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி முத்தால்ராயன் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை மேட்டுப்பாளையம் வயல்வெளியில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வயல்வெளியில் பிணமாக கிடந்த முத்தால்ராயன் உடலை கைப்பற்றினர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் முத்தால்ராயன் சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரெட்டிச்சாவடி அருகே உள்ள டி.குமாரமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (35), வடப்புறம் கீழ்பாதி வீரையன் (35), புதுக்கடையை சேர்ந்த திருமுருகன் (40) ஆகியோரை நேற்று இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கள் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தங்கள் பாணியில் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முத்தால்ராயனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    அய்யனார், கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். முத்தால்ராயனின் மனைவி ஜமுனாவும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். நாளடைவில் ஜமுனாவுக்கும், அய்யனாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

    இந்த விவரம் முத்தால்ராயனுக்கு தெரிய வந்தது. இதனால் முத்தால்ராயனால் பிரச்சனை ஏற்படும் என்று அய்யனார் நினைத்தார். முத்தால்ராயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    கடந்த மாதம் 7-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென்று ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த அய்யனார், வீரையன் ஆகியோர் முத்தால் ராயனை ஏமாற்றி ஒரு மோட்டார் சைக்கிளில் மது குடிக்க அழைத்து சென்றனர்.

    அங்குள்ள மதுக்கடையில் மது குடித்துள்ளனர். அப்போது திருமுருகன் என்பவரும் அங்கு வந்துள்ளார். குடிப்போதையில் முத்தால்ராயன் தள்ளாடினார். இதைத்தொடர்ந்து அய்யனார், வீரையன் ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்தால்ராயனை புதுக்கடை மேட்டுப்பாளையம் வயல்வெளிக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்குள்ள சேற்றில் முத்தால்ராயனை அமுக்கினர். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டார்.

    அதன் பின்பு அவர்கள் முத்தால்ராயன் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி நிர்வாணமாக வயல்வெளியில் போட்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×