search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்து வைக்காததால் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்
    X

    திருமணம் செய்து வைக்காததால் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்

    முத்துப்பேட்டையில் திருமணம் செய்து வைக்காததால் முதியவரை கோடரியால் வெட்டிக்கொன்ற அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(60). இவர்களுக்கு ராணி(40), விஜயா(35) ஆகிய மகள்களும், முருகப்பன்(34) என்ற மகனும் உள்ளனர். இதில் ராணி, விஜயா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

    முருகப்பன், மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். முருகப்பன் சற்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்த தனது தந்தை கணேசனிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு முருகப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கணேசன், முருகப்பனிடம் உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடி, துடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சிவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×