search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி மூன்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.

    ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 52 அ.தி.மு.க. நிர் வாகிகள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.

    அதுபோல திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் திருவாரூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 2 தடவை எம்.எல்.ஏ.ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் மீண்டும் களம் இறங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார்.

    இதற்கிடையே குத்தாலம் தொகுதியில் இருந்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பா சுப்பிரமணியனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் முக்கிய ஆதரவாளர் ஒருவரும் வேட்பாளராக மாற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டம் இன்று மதியம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மற்றும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

    நாளை நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது.

    திருவாரூரில் களம் இறங்க அ.தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 2016-ல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது நாளை மாலை அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளரை அறிவித்த தும் பிரசார பணிகளைத் தொடங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற் காக அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங் கிணைக்க தனியாக ஒரு குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களையும் பிரசார பணி களில் ஈடுபடுத்த திட்ட மிட்டுள்ளனர். இது பற்றிய முழு விபரமும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். #ThiruvarurByElection #ADMK
    Next Story
    ×