search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி தலைமையில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்- ஜிகே மணி
    X

    அன்புமணி தலைமையில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்- ஜிகே மணி

    வேலூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அன்புமணி தலைமையில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது என்று ஜி.கே.மணி கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    வேலூர்:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க. சார்பில் ‘பாலாறு காப்போம், பாசனத்தை பெருக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிரசார பயணம் தொடங்குகிறது. இந்த பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்த பிரசார பயணம் புல்லூரில் தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் சென்று இரவு வேலூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    23-ந்தேதி காலை தாமல் பகுதியில் தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சென்று காஞ்சீபுரத்தில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பிரசார பயணம் அரசியல் ரீதியாக இல்லாமல் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவேண்டி நடைபெறுகிறது. பாலாற்று பகுதியில் ஆந்திர அரசு கட்டும் தடுப்பணைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. காமராஜர் காலத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. அதற்குபிறகு வந்த எந்த ஆட்சியும் பெரிய அணையை கட்டவில்லை. தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன். இதில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோதாவரி, பாலாற்றை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    Next Story
    ×