search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் நாள் மணக்கோலம் - மறுநாளில் பிணக்கோலம்: 16 வயது சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    முதல் நாள் மணக்கோலம் - மறுநாளில் பிணக்கோலம்: 16 வயது சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிட தொழிலாளி. இவருக்கும், தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.



    மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.

    இந்தநிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே, அதிகாரி குமுதா மற்றும் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது. உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தான் 10-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு வினு மிகவும் சோகத்துடன் வீட்டுக்கு வந்தார். திருமண வீடு களை இழந்து போனது. வினு தனது அறைக்கு தூங்க சென்றார்.

    நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை தட்டினர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

    கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் வினு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். திருமண நாள் இரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருமண வரவேற்பின் போது அதிகாரிகள் தலையிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால் ஏற்பட்ட அவமானத்தால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மணக்கோலத்துடன் கலகலப்பாக காணப்பட்ட வினு, தனது அறையில் விபரீதமாக தற்கொலை செய்துகொண்டு மறுநாள் காலையில் பிணமாக கிடந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. 
    Next Story
    ×